நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் பேசப்பட்ட சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, இணையதளங்களில் தமக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.








