பாஜக எம்.எல்.ஏ க்களை யாரும் தூக்கி செல்ல முடியாது என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கோவை தெற்கு வானதி சீனிவாசன், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி என 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனிடையே திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், தங்களுடன் 2 பாஜக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருப்பதாகவும், திமுக தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் திமுகவில் இணைத்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “2 பாஜக எம்.எல்.ஏ.க்களை தூக்கி விடுவோம் எனக் கூறிய எம்.பி யாரென எனக்கு தெரியாது. பாஜக எம்.எல்.ஏ க்களை யாரும் தூக்கிச் செல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், தூக்கிச் செல்வதற்கு எம்.எல்.ஏ.க்கள் என்ன கத்தரிக்காய், வெண்டைக்காயா எனக் கேள்வி எழுப்பிய அவர், “நிறைய முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைத்து வருகிறார்கள், இன்னும் முக்கிய பிரபலங்கள் பாஜகவில் இணைவார்கள்” என கூறினார்







