வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் புரனமைக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது சிலையையும் காணொலி காட்சி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி தங்கியிருந்த அறை புனரமைத்து பராமரிக்கப்படும் என்றும், அங்கு அவரது உருவ சிலை நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, பாரதியாரின் சிலை அமைக்க 18 லட்சம் ரூபாயும், அறைக்கு மாத வாடகையாக 67 ஆயிரத்து 500 ரூபாயும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் வாரணாசியில் பாரதியாரின் அறை புரனமைக்கப்பட்டு, அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். அவரது 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வாரணாசியில் புணரமைக்கப்பட்டுள்ள பாரதியாரின் அறையையும், அவரது சிலையையும், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பாரதியார் குறித்த சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின்போது வாரணாசியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







