ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஒன் யூஸ் எனும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், இருப்பு, விற்பனையை ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் பாதியளவு தடை விதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு கேரள மாநிலம் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது.
இந்நிலையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாறப் பயன்படுத்தும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள், பலூன் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அலங்காரத்துக்கான தெர்மாகோல் பொருட்கள் உள்ளிட்டவை ஜூலை 1 முதல் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா