பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீட்டர் பொருத்தியும் செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறினர்.
கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல், பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தினர்.