காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக கடந்த 2019ல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராக தற்போது வரை தொடர்கிறார்.
இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர் அதற்கான தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல கட்சிக்கு புதிய தலைமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதம் குறித்தும் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்த பின்னரும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தததை போல தெரியவில்லையென கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொருபுறம் ஜிக்னேஷ் மேவானி மற்றும் கன்னய்யா குமார் போன்ற இளம் தலைவர்களை கட்சி தன்பால் ஈர்த்துள்ளது அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.