நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார், அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த செய்தியினைக் கேள்வியுற்ற தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் 5 இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில், தஞ்சாவூர் தேர் விபத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








