போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மேலும் 2 பேர் கைது

கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்த காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவினர் 2 பேர் பிடிபட்ட நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து தூத்துக்குடி…

கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்த காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவினர் 2 பேர் பிடிபட்ட நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டினர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோர் அங்கு வந்தனர் .அப்போது, அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது.இந்நிலையில், போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை, சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பாஜக நகரத்தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக நிர்வாகி இரண்டுபேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகிகள் பரமசிவம், சீனிவாசன் ஆகியோரும் பிடிபட்டுள்ளனர். முன்னதாக ஏடிஎஸ்பி கார்த்திகேயன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில்
சென்று சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் டிஎஸ்பி-க்கள் பிரகாஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.