“திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாகை, திருப்பூர் தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு தலைவர் சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு தலைவர் சுப்பராயன் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெறும் என்று தமிழ்நாட்டில் கிராமப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில் இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இங்கு நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்றது. உடன்பாடு தொடர்பான அறிக்கை மார்ச் மூன்றாம் தேதிக்கு பின்னர் எதிர்பார்க்கப்படும்.
மார்ச் மூன்றாம் தேதிக்கு பிறகு மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்ட வாய்ப்புள்ளது.
நாகை, திருப்பூர் தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு சுப்பராயன் எம்பி கூறினார்.