இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் முக்கியம். திராவிடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் பேசியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற வானம் கலைத் திருவிழா துவக்க விழா நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், நான் வாழ்ந்த ஊர், அங்கு இருந்த மைதானம் எனக்கானது இல்லை என்ற எண்ணம் என்னுடைய மனதில் சிறு வயதிலிருந்தே இருந்து வந்தது. சாதி ஒடுக்குமுறையை ஒரு அனுபவமாகப் புரிந்து கொள்ளப்பட்டது. சாதி ஒடுக்குமுறை எல்லா மட்டங்களில் இருந்ததை இளம் வயதில் புரிந்து கொண்டேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கல்லூரி காலத்தில் இலக்கியங்களை வாசிப்பதன் மூலம் இதனை எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். இலக்கியங்கள் வாசித்ததன் மூலமாக திரைப்படம் எடுக்க எண்ணம் வந்தது. தலித் எழுத்துக்கள் என்னை செதுக்கியது. எங்க ஊரில் திருவிழாக்கள் பெரிய அளவில் நடைபெறும். ஆனால் அந்த கொண்டாட்டங்களின் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன். கொண்டாட்டத்தில் நான் ஒருவனாக இல்லை.
என்னுடைய கொண்டாட்டம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்தது. நான் என்னுடைய மக்களுடன் இணைந்து ஏன்? கொண்டாட்டத்தை அனுபவிக்க கூடாது. நம்முடைய கொண்டாட்டம் ஏன் தடுக்கப்பட்டிருக்கிறது இதனை எவ்வாறு உடைக்கலாம்? இந்த கேள்விகள் எழுந்தது என்று பேசினார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பொதுவாகவே தமிழ் இலக்கிய சூழலில் பொதுஜன சமூகத்தொடர்பு உள்ளதா என்றால் அதுவே பெரிய கேள்விக்குறிதான். பொது சமூகம், இலக்கியங்களைக் கொண்டாடுவது என்பது தமிழ் சூழலில் மிகக் குறைவு. ஆனால், இன்றைய சூழலில் எழுத்தை வாசிக்கிற நிறைய இளைஞர்கள் உருவாகியுள்ளனர்.
அப்படி இருக்கையில் தலித் இலக்கிய வகைமை என்கிற ஒன்று இருப்பததை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சாதிக்கான கூடுகை கிடையாது. இது தமிழகத்தில் உள்ள இந்தியாவில் உள்ள மறுக்கப்பட்ட எழுத்துகளைப் பேசக்கூடிய ஓர் இடமாகப் பார்க்கிறேன். இது ஜனநாயகத் தன்மையுடைய வடிவமாக நான் பார்க்கிறேன். விடுதலைக்கான ஒரு எழுத்தை சொல்லுகிற வடிவமாகப் பார்க்கிறேன்.
பிரிட்டிஷிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிற இந்தியர்களுடைய மனநிலையில் இருந்து உருவான எழுத்து வடிவங்களை , அதனுடைய கொண்டாட்டங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, உலக அளவில் அப்ரசல் எழுத்து வடிவங்களை எடுத்துக் கொள்கிறோமோ, அமெரிக்க கருப்பர்களின் எழுத்து வடிவம் எப்படி ஒட்டுமொத்த உலகத்தில் இருக்கக்கூடிய அப்ரசல்களுடைய எழுத்து வடிவமாக கொண்டாடப்படுகிறதோ, அரபி இலக்கியங்கள் எப்படி கொண்டாடப்படுகிறதோ அந்த அளவுக்கு தமிழ் சூழலிலும், இந்திய சூழலிலும் தலித் இலக்கியங்களுக்கு மிகவும் முக்கியப் பங்கு இருப்பதாக நான் கருதுகிறேன்.
இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வடஇந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்களை விட, உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வட இந்தியர்களுக்கு உண்டு. இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம்.
தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இளையராஜா கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் முக்கியம். திராவிடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்றார்.