நடிகர் அருண் விஜய் நடிக்கும், “பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது.
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் பாராட்டை குவித்துள்ளது. அவர் நடிப்பில் சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து தான் நடித்த படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் அருண் விஜய். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 திரைப்படங்கள் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநாக மாறியுள்ளார் அறிவழகன். குற்றம் 23 என்ற மருத்துவ முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தையும், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிசையும் இயக்கியிருந்தார். இவற்றில் நாயகனாக அருண் விஜய் நடித்திருந்த நிலையில், மீண்டும் பார்டர் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.
இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள பிரபு திலக் கூறுகையில், “சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.







