ஹிஜாப் வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு மனு மீது வாதம் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் எனவும், ஹிஜாப் இஸ்லாத்தில் இனறியமையான பழக்கமல்ல எனவும் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அந்த உத்தரவை எதி்ர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
இந்த விவகாரம் சட்ட தொடர்பாக பல கேள்விகளை எழுப்புவதால், இந்த விவகாரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அதேவேளையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை, நேரடியாக வாதம் செய்வதாக நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு நேரடியாக வாதம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனவே வாதம் செய்வதற்காக எதிர்மனுதாரரான கர்நாடக தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 5-ம் தேதிக்கு வாதம் செய்வதற்காக ஒத்திவைத்து நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
– இரா.நம்பிராஜன்








