கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பயனுள்ள ஒருவரும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது மற்றும் இந்த திட்டத்திற்கு டோக்கன் வ்ழங்குவது, விண்ணப்பம் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகள் மூலமாக நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். இரண்டு கட்டமாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றை தெரு வாரியாக வீடு தேடி வழங்க இருக்கிறோம்
நாளை காலை முதல் பொதுமக்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் தெருவாரியாக சென்று வினியோகம் செய்யப்படும். வங்கி கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு முகாம்களிலே வங்கி கணக்கு ஏற்படுத்தி தரப்படும். வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதிக்கு பொதுமக்கள் முகாமுக்கு வந்தால் போதும், தேவையற்ற பதற்றம் அவசியமில்லை. இந்த திட்டத்திற்காக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு அட்டை, வங்கி கணக்கு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பயனாளிகள் சேர்ப்பு தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களின் இடம் மற்றும் தேதி நியாய விலைக் கடைகளில் ஒட்டப்படும், அதை பார்த்து டோக்கன் எண் ஏற்ப குறிப்பிட்ட தேதியில் பொதுமக்கள் வந்தால் போதும். சென்னையில் 98 வார்டுக்கு முதல் கட்ட முகாமில், 102 வார்டுக்கு இரண்டாம் கட்ட முகாமிலும் விண்ணப்பங்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துளளார்.
- பி.ஜேம்ஸ் லிசா










