செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தோடு இதுபோன்ற போட்டிகள் நடத்த மேலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். கடந்த 9ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு பெற்றது. இதில் இந்தியா ஒபன் பிரிவில் வெண்கல பதக்கமும், மகிளிர் பிரிவில் வெண்கல பதக்கம் என 2 வெண்கல பதக்கங்களை வென்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது டட்விட்டர் பதவில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி .விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.







