இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகு

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஐஏஎஸ் சுப்ரியா சாகு வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கள இயக்குநர்…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஐஏஎஸ் சுப்ரியா சாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் படிஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் உலக யானைகள் தினம்,12.08.2022 அன்று உலக பழங்குடியினர் தினம், 09.08.2022 அன்று உலக செஸ் விளையாட்டு போட்டி நிறைவு நாள் விழா, யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன. நிகழ்ச்சியை துணை இயக்குநர் மா.கோ.கணேசன் துவக்கி வைத்தார்.

யானைகள் அணிவகுப்பு சீத்தல் ஓய்வு விடுதியில் இருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை வந்து சதுரங்க பலகையை 5 முறை சுற்றி வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து உற்சாகமாக இருந்தனர். இந்நிகழ்வில், உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, வெங்கடேஷ் மற்றும் வனவர், வனக் காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், யானைப் பாகன்கள் மாவூத், கவாடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விலங்குகளை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதா என்று இச்சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்து ஐஏஎஸ் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பதிவில், இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. விலங்குகளை கண்காட்சியாகப் பயன்படுத்த முடியாது. ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள குழுவினர் தங்கள் உற்சாகத்தால் எல்லை மீறிச் சென்றுள்ளனர். இதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.