சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (74). மாற்றுதிறனாளியான இவா், கடந்த 18 ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மாடு திடீரென சுந்தரத்தை முட்டி கீழே தள்ளியது. இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார்.
சுந்தரத்தை உடனடியாக மீட்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சுந்தரத்தை முட்டிய மாடு, கோயில் மாடு என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த மாடு பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமானது அல்ல என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாடு முட்டியதால் ஏற்பட்ட காயத்தால் தான் முதியவர் சுந்தரம் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு, இந்த வழக்கு பிரிவுகள் மாற்றப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







