“தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு, அந்த நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இனி மின்வெட்டு காரணமாக அவதிப்படாத வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.