“கர்நாடக பாஜகவில் எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கம்” – முன்னாள் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!

தன்னைச் சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா மறுத்துவிட்டார் என்று பாஜக முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்துள்ள…

தன்னைச் சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா மறுத்துவிட்டார் என்று பாஜக முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்துள்ள நிலையில்,  முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா பாஜக வேட்பாளராக போட்டியிடும் சிவமோகா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,  சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், தன்னை டெல்லியில் ஏப். 3-ஆம் தேதி சந்திக்குமாறும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

இதைத் தொடர்ந்து,  நேற்று முன்தினம் டெல்லி சென்ற ஈஸ்வரப்பா,  மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார்.  இதுகுறித்து முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா கூறியதாவது:

“மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதைத் தொடர்ந்து,  டெல்லி சென்றிருந்தேன். ஆனால்,  அங்கு அவரைச் சந்திக்க முடியவில்லை.  அவரிடம் சில கேள்விகளை நான் கேட்டிருந்தேன்.  அதற்கு அவரால் பதிலளிக்க முடியாததால், என்னைச் சந்திக்க அவர் மறுத்துவிட்டதாகக் கருதுகிறேன்.  நான் நியாயத்துக்காகப் போராடுவதை சரி என்று அமித் ஷா உணர்ந்திருக்க வேண்டும்.  டெல்லிக்கு வருமாறு அழைத்துவிட்டு, என்னை அவர் சந்திக்கவில்லை.  காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் பாஜகவிலும் புகுந்துவிட்டது. எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கத்தில் கர்நாடக பாஜக உள்ளது ”

இவ்வாறு பாஜக முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.