அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் நம்பத் தகுந்த வீரரான அம்பத்தி ராயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். கடந்த 13 வருட பயணத்தில் சென்னை மற்றும் இதற்கு முன்தான் விளையாடிய மும்பை ஆகிய இரு அணிகளும் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்ததாகவும், இரு அணிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவே தனது கடைசி ஐபிஎல் போட்டி என அறிவித்த ராயுடு, அடுத்த வருடம் முதல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என பதிவிட்டதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தன. எனினும், பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஓய்வு குறித்த தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். இது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து சென்னை அணி நிர்வாகத்தின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தனியார் ஊடகத்திற்கு வழங்கியுள்ள விளக்கத்தில், ராயுடு தனது ஆட்டம் நிலையற்றதாக இருப்பதனால் அவ்வாறு பதிவிட்டு இருந்தார். அவர் ஓய்வு பெறப்போவது இல்லை, மனரீதியான குழப்பம் தான் அவரை அவ்வாறு பதிவிட செய்துள்ளது. அவர் எங்களுடன் இருப்பர் என தெரிவித்துள்ளார்.