உதகையில் மனதை கவரும் ரோஜா கண்காட்சி தொடக்கம்

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. கோடை சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த…

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.

கோடை சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  இவ்விழா நடைபெறவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா இந்த வருடம் தொடங்கியுள்ளது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 17வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதில் 31, 000 வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு, குழந்தைகளை கவரும் விதமாக ரோஜா மலர்களால் கார்ட்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு பட்லு, மான், ப்யானோ மற்றும் பனிமனிதன் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 50,000 மஞ்சள் ரோஜாக்களை கொண்டு மஞ்சப்பை போன்ற வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும்,இந்த ரோஜா கண்காட்சியில், 4600க்கும் மேற்பட்ட ரகங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. யுஏஇ மன்னர் உயிரிழப்பு காரணமாக துவக்க விழா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் மலர் அலங்காரங்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் 17வது ரோஜா கண்காட்சியில் பூத்துக்
குலுங்கும் வண்ண மலர்கள் கண்களுக்கு விருந்து படைத்து உள்ளதாகவும், ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை கண்டு ரசிப்பது மிகுந்த பிரமிப்பை
ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.