ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி; சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் சரி, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நடைபெற்று வரும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கே.டி ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை பயந்து பயந்து இருந்த திமுகவினர் ஜெயலலிதா இறந்த பின்பு பயமில்லாமல் தப்புகளை செய்கிறார்கள்.
இந்த ஆட்சியில் நிம்மதியாக குடிக்க வேண்டும் நினைத்தால் கூட வழியில்லை. போதை ஏறவில்லை என குடிமகன்கள் குமுறுகிறார்கள். அரசு மதுபான சரக்கு வருவதில்லை, செந்தில் பாலாஜி சரக்கு வருகிறது.
நின்றால் நடந்தால் அனைத்துக்கும் வரி போடுகிறது இந்த அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட்டிங் நடத்தி வருகிறாரே தவிர மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை.
பட்டாசு தொழில் செய்பவர்கள் மதுபான விற்பவர்கள் போலவும் ஆன்லைன் சூதாட்டம் நடத்தவர்கள் போலவும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஆட்சியில். விடியல் தரப் போராரு என்று பாட்டு மட்டும் போட்டார்கள் தவிர தற்போது வரை விடியல் தரவில்லை.
முதலமைச்சரை சுற்றி ஐந்து பேர் கொண்ட வளையம் இருக்கிறது. அவரை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை. கருவறை முதல் கல்லறை வரை உதவிய இயக்கம் அதிமுக.
ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி சட்டமன்ற தேர்தல் சேர்ந்து வந்தாலும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. திமுகவை மக்கள் வெறுத்து விட்டார்கள்.
வரும் தேர்தலில் அதிமுகவை வெற்றியடைய செய்ய வேண்டும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ராஜேந்திர பாலாஜி.








