“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள…

ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்தியா எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விளக்கினார். தலிபான் விவகாரத்தில் மற்ற நாடுகளைபோல, இந்தியாவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்தும், அந்நாட்டின் தற்போதைய சூழல் குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, இன்றையக் கூட்டம் திருப்திகரமாக அமைந்தததாகக் கூறினார். ஆப்கன் விவகாரத்தால் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என இன்றைய கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கூட்டம் திருப்திகரமாக அமைந்தாக கூறிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை அகதிகளாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.