அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு, அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் பணி செய்யாத மருத்துவர்களிடம் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் சேரும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு உயர் சிறப்பு மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
படித்து முடித்த பின்னர் அரசு மருத்துவமனைகளில் காலி இடங்கள் இருந்தும் 2 ஆண்டுகள் பயிற்சி பணியில் ஈடுபடாமல் ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு உயர் சிறப்பு மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு ஜூலை 30 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற்றது.
ஆனால் அந்த கலந்தாய்வில் பல மருத்துவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், பயிற்சியில் ஈடுபடாத மாணவர்களின் விவரங்களைக் கண்டறிந்து ஒப்பந்தத்தை மீறிய மருத்துவர்களிடம் 50 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.








