டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென நடுவானில் குலுங்கியதில் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.
ஏர் இந்தியாவின் ஏஐ302 விமானம், டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்து. இந்த நிலையில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென விமானம் குலுங்கியது. இதனால் 7 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதில் மூன்று பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் விமானம், சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்ததும் ஏர் இந்தியா விமானத்தின் மேலாளர், பயணிகளுக்கு மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளை செய்து தந்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு எந்த பயணிக்கும் பெரிய காயம் இல்லை என விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







