குற்றாலம் அருகே ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை ரசாயனம் தடவிய பணத்தை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு
வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக
பணியாற்றி வருபவர் ராமசுப்பிரமணியன்.
இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த பணியாளராக தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி நிரந்தரம் பெற்று
குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய போது இவருக்கு வழங்க
வேண்டிய நிலுவை தொகையான ரூ.3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்
கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் ரூ.10 ஆயிரம்
லஞ்சம் கேட்டுள்ளார்.
தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளதால் தன்னிடம் பணம் இல்லை எனவும்
ஆகையால் தனக்கு சேரவேண்டிய தொகையை மீட்டு தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என ஸ்ரீனிவாசனிடம் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுத்தால் மட்டுமே உன் பணம் உனக்கு கிடைக்கும் என அதிகாரமாக பல நாட்களாக கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், ராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை
அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின்
அறிவுறுத்தலின்படி, ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை
ஸ்ரீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.
அப்பொழுது, மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்
கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீசார் ரசாயணம் தடவிய நோட்டுகளுடன், சீனிவாசனை கையும், களவுமாக கைது செய்தனர்.
மேலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்
ஒருவருக்கே, அவருக்கு சொந்தமான பணத்தை கொடுப்பதற்காக உயர் அதிகாரி லஞ்சம்
கேட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்த ஆடுவதாக கூறப்படும் சூழலில், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.







