முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பாஸ்கரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜெயலலிதா ஜீவாதார உரிமையை பெற்று தந்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அணையில் தொடர்ந்து 3 முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது. இதன்மூலம் 5 மாவட்டங்கள் பயன் பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், கேரள அரசின் இடையூறுகளை திமுக அரசு கண்டும், காணாமலும் இருப்பதாகவும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமலேயே சென்றுவிட்டார்.








