அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தங்கள் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக மாட்டேன் எனக் கூறியது போல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார் எனக் கூறியதற்கேற்ப உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களை எதிர்த்தோருக்கு பாடமாக அமைந்துள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற தனது பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை எனவும், அதேநேரம், எடப்பாடி பழனிசாமி வகிக்கும் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற தானும், தன்மீது பற்றுக் கொண்ட அதிமுக தொண்டர்களும் பாடுபடுவோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.