அதிமுகவுக்கு எதிரான தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு,2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்து.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாகவும் வாதிட்டார். கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து விசாரணையை நவம்பர் 8 ம் தேதி நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.







