சூடானில் உள்ள ஷெண்டி மாவட்டத்தில் இருக்கும் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 15 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்திலிருந்து 6 பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். மேலும் மாயமான 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து படகு விபத்தில் மாயமானவர்களை மீட்க சிறப்பு மீட்புக் குழுக்களையும் போதிய உபகரணங்களையும் அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது, அதிகப்படியான பயணிகளை ஏற்றுவது உள்ளிட்டவற்றால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.







