தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் தென்சென்னை மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் (பூத்கமிட்டி பொறுப்பாளர்கள்) கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, மத்திய இணையமைச்சர் எல் முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதிலும் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் இன்னும் அதிக கவனம் தேவைப்படுகிறது.
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி என்பது மிக முக்கியமான தொகுதி என்பதால் பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டோம். தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பான திட்டங்களை பிரதமர் வழங்கியுள்ளார். மெட்ரோ திட்டம், வந்தே பாரதம், விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு ஒதுக்கபட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு வழங்கபட்டுள்ளது.
பாரதப் பிரதமர் தொடர்ந்து இந்திய வளர்ச்சிக்காக அதிக திட்டத்தை தொடங்கி வைத்து வருகிறார். 2009 இல் இருந்து 2014 வரை வெறும் 800 கோடி மட்டுமே ரயில்வே திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ரயில்வே திட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் மித்ரா பூங்கா திட்டத்தின் முன் ஒரு லட்சம் முதல் 2 நபர்களுக்கு வரை வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறவுள்ளது. வரும் காலங்களிலும் தொடர்ந்து இதுபோன்ற திட்டங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறிய எல்.முருகன், ஜெ பி நட்டாவுடன் நிகழ்ந்த சந்திப்பு என்பது ஒரு வழக்கமான சந்திப்பு தான் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய அவர், அதிமுகவுடன் எங்களது கூட்டணி மிகவும் வலிமையாக தான் இருக்கிறது. எங்களது கூட்டணி எப்போது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கர்நாடக தேர்தல் தற்பொழுது நடைபெற உள்ளது. அதற்கான கவனத்தை செலுத்த உள்ளோம். தமிழகத்திலும் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி தலைவர்களாக இருந்தவர்கள் தங்களது பங்களிப்பை அளித்து கட்சியை சிறப்பாக நடத்தி உள்ளனர் . இந்திய அளவில் 150 தொகுதிகளை கட்சி மேலிடம் அடையாளம் கண்டுள்ளது. அங்கு வெற்றி பெற அதிக கவனம் தேவைப்படுகிறது. கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதல் படியே எங்களது பணி தொடரும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா