கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18
ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் 14வது திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் அருகில்
உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயம். திருமங்கை ஆழ்வாரால் மங்களா
சாசனம் செய்யப்பட்ட இத்தலம் கல் கருட தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள்
ஆலயம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 1.15 கோடி ரூபாய் அளவில் திருப்பணிகள்
செய்யப்பட்டு இன்று காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோயில் விமான கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த ஆலயம் ஐந்தாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கோச்சங்கட் சோழனால் கட்டப்பட்டது என்றும், இம் மன்னன் கட்டிய ஒரே வைணவ தலம் இந்த கோயில் என்றும் கூறப்படுகிறது.