அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான…

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அந்த நேரத்தில் அமெரிக்கா, தனது விமானப் படையின் C17 குளோப்மாஸ்டர் விமானத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தியிருந்தது. அப்போது அங்கு குவிந்த ஆயிரக்கணக்கானவர்களில் சிலரை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் புறப்பட்டது.

அப்போது பேருந்துகளில் ஏறுவதைப் போல, விமானத்தின் டயர் மற்றும் இறக்கைகளில் சிலர் தொங்கிக் கொண்டிருந்தனர். விமானம் பறந்தபோது டயர் பகுதியில் அமர்ந்திருந்த 2 பேர் கீழே விழுந்து பலியாயினர். சிலரின் உடல்கள், டயர் பகுதியில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கா னிஸ்தான் கால்பந்து வீரர் ஸாகி அன்வாரி (Zaki Anwari) என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய அணியில் ஆடி வந்துள்ளார். இதை அந்நாட்டு கால்பந்து விளையாட்டுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.