பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேட்டறிகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தார். அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு குறித்து இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.








