ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு அங்கு பல கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களின் கல்வியை தொடர பள்ளிகளை திறக்ககோரி பெண்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “கல்வி என் உரிமை! பள்ளிகளை மீண்டும் திற!” போன்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆட்சி அதிகாரத்தில் தலிபான்கள் வந்த பிறகு, 1996 முதல் 2001 வரை அதிகாரத்தில் இருந்த போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருக்காது என உறுதியளித்தனர். ஆனால் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே அரசு பணியில் இருந்த பெண்கள் தங்களின் வேலைகளுக்கு திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் தனித்தனியான நாட்களில் மட்டுமே பொது இடங்கள் மற்றும் பூங்காக்களுக்கு செல்ல முடியும்.
மே மாத தொடக்கத்தில், நாட்டின் தலைவரும் தலிபான் தலைவருமான ஹிபத்துல்லா அகுந்த்சாடா, பெண்கள் பொதுவாக வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து பெண்கள் பொது வெளியில் செல்ல வேண்டியிருந்தால், அவர்களின் முகம் முதல் கால் வரை தங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உள்ள பர்தா உடை அணிந்து தான் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தலிபான்கள் ஆட்சியில், பெண்களின் உரிமைகளுக்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை விடுத்த கோரிக்கையும் தலிபான்கள் நிராகரித்தனர்.