’அதிமுக கூட்டணி தொடர்கிறது; பாமக பற்றி தெரியாது’ – அண்ணாமலை பேட்டி

அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும், பாமகவுடனான கூட்டணி பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்…

அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும், பாமகவுடனான கூட்டணி பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி தொடர்கிறது. திருச்சி சூர்யா சிவா தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக பாஜகவில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியை வளர்க்கும் பணி எனக்கு இருப்பதால் கட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள் களை எடுக்கப்படுவார்கள். தமிழகத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து தற்போது பேச முடியாது. ஆன்லைன் ரம்மி என்பது தடை செய்யப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தமிழக பாஜக பேருந்து போல தான். பழையவர்களை இறக்கி விட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.