நாளை விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG,UKG மற்றும் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அரசு கடைபிடித்து வருகிறது. தங்கள் குழந்தைகளை விஜயதசமியன்று பள்ளிகளில் சேர்ப்பதால் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆசிர்வாதத்தில் குழந்தையின் கல்வி திறன் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல், தனியார் பள்ளிகள் விஜயதசமியன்று மாணவர்கள் சேர்க்கையில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமிக்கு முன்பு நோட்டிஸ், குறுஞ்செய்தி போன்ற விளம்பரங்களால் பெற்றோர்களுக்கு தகவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டு நாளை விஜயதசமி என்பதால் அரசுப்பள்ளியில் LKG,UKG மற்றும் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியராவது பணிக்கு வரவேண்டும் என கட்டாயமாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான உரிய அறிவுறுத்தல் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது. இந்தாண்டு விஜயதசமிக்கு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த வந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்








