நவீனம் நாகரிகம் மற்றும் சுதந்திரம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறதோ அந்த
அளவிற்கு தவறுகளும் வளர்ந்து இருப்பதாக திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், சென்னை காவல் துறை
சார்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நடனமாடி போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர், ”போதை பொருட்களைத் தடுக்க அனைத்து மக்களின் ஒத்துழைப்பு தேவை. போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டால், அதைப் பொதுமக்கள் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்” என கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, ”போதைப் பொருள் நம் சமூதாயத்திற்கு தேவையற்ற ஒன்று இதை நாம் அனைவருக்கும் சொல்ல வேண்டும். இளைஞர்கள் அனைவரும் போதைக்கு நோ ( no drugs ) சொல்ல வேண்டும்” என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய பாடலாசிரியர் சினேகன், ”மக்கள் மீது அக்கறையோடு இந்த ஏற்பாடு செய்த காவல் துறைக்கு நன்றி. நவீனம், நாகரீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், சுதந்திரம் எந்த அளவு வளர்ந்து கொண்டிருகிறதோ அதே அளவு தவறுகளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. போதைக்கு அடிமையான பல நாடுகள் முகவரியை, கலாச்சாரத்தை, அடையாளத்தை, கனவுகளை, எதிர்காலத்தை இழந்துள்ளன” என்று கூறினார்.