காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் வேட்புமனுவை திரும்பபெற வலியுறுத்துமாறு மூத்த தலைவர்கள் சிலர் விடுத்த வலியுறுத்தலை ராகுல்காந்தி நிராகரித்துவிட்டதாக சசிதரூர் கூறியுள்ளார்.
சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் கே.என்.திரிபாதியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேட்புமனுவை திரும்பப் பெற இன்னும் கால அவகாசம் முடிவடையாத நிலையில் தற்போதைய நிலவரப்படி மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை திரும்பப் பெறச்செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனால் அதனை நிராகரித்த ராகுல்காந்தி, தலைவர் தேர்தலில் போட்டியிருப்பதுதான் காங்கிரசுக்கு நல்லது என தெரிவித்ததாக சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிருக்க வேண்டும் என கடந்த 10 வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன் என ராகுல்காந்தி தம்மிடம் கூறியதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெரிய தலைவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என எதிர்பார்த்து தாம் போட்டியில் களம் இறங்கவில்லை எனக் கூறியுள்ள சசிதரூர், தொண்டர்கள் கேட்டுக்கொண்டதையே ஏற்றே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களம் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரசில் உள்ள இளம் தலைவர்களும், தொண்டர்களும் தமக்கு ஆதரவாக உள்ளதாகவும் சசிதரூர் கூறியுள்ளார். அவரது சொந்த மாநிலமான கேரளாவில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் சசிதரூர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது-