நடிகர் டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிடுவோர் மீது சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
‘பொல்லாதவன்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் டேனியல் ஆனி போப் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து டேனியல் ஆபாசமாக பேசியதாக ஜேசன் சாமுவேல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் போலியானவை எனவும், டேனியலின் பெயரை கெடுக்கவே இது போன்ற செயலில் சில விஷமிகள் ஈடுபடுவதாகவும் அவரது வழக்கறிஞர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக வலைதளங்களில் டேனியல் குறித்து பதிவிட்டு வரும் அவதூறு வீடியோக்கள் புகைப்படங்கள்,மீம்ஸ் போன்றவற்றை உடனடியாக நீக்காவிட்டால் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்







