நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்புடன் தொடரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் கண்டித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் எம்.பிக்களை சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். இதன் காரணமாக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். இச்சூழலில் அனைத்துக்கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி முதலமைச்சர் தலைமையில் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்த வரைவு தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைத்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. ஆனாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாநில நிதியிலிருந்து நடத்தப்படும் கல்லூரியில் எந்த விதமான பாடத்திட்டம் பின்னபற்றப்பட வேண்டும் என்பது மாநிலம் சார் உரிமையாகும். ஆனால் நீட் இதை மறுக்கிறது. இதனால் மாநில உரிமை பறிபோகிறது.” என்று கூறினார். மேலும்,
“இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் எம்.பிக்களை அமைச்சர் சந்திக்காததால் அவரது அலுவலகத்தில் மனு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தால் அனைத்து கட்சியினரும் அவரை சந்திப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெற்றுள்ள இந்த வளர்ச்சி சமூக நீதிக்கான சட்ட மற்றும் மக்கள் போராட்டத்தின் மூலமாகவே பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில உரிமையையும் ஏழை எளிய மக்களின் உயர்கல்வி கனவையும் கலைத்திடும் நீட் தேர்வை மாநிலத்திலிருந்து நீக்கிட, மூத்த சட்ட வல்லுநர்களின் சட்ட ஆலோசனையுடன் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும்,
நீட் தேர்வி்ன் பாதகங்களை இதர மாநிலங்களுக்கும் எடுத்துரைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.” என்று கூறினார்.