சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை இன்று மாலைக்குள் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழை குறித்து சென்னை ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
சென்னையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 20.55 செமி சராசரி மழை பதிவாகியுள்ளது. 450 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ள நிலையில் 156 இடங்களில் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 19 முறிந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் அதிகம் தேங்கியுள்ள வட சென்னை பகுதிகளில் துரிதப்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்துள்ளோம். 20.55 செமி மழை சென்னையில் பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது. புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டும் தான் மழை நீர் தேங்கியுள்ளது.
திருவிக நகர் பகுதியில் 35 செமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு அளவுக்கு அதிகமான மழையே காரணம். மழை நீர் தொடர்ந்து வடிந்து வருகிறது. 536 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ரயில்வே துறையிடம் அனுமதி கேட்டு விரைந்து மழை நீர் வெளியேற்றப்படும்.
169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் மழைநீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண காசோலை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்
200 வார்டுகளிலும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும். கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்த தேவையில்லை” என்று தெரிவித்தார்.