காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் ஏரிகள் பயன்பெறுகிறது மேலும் இதுகுறித்த சிறப்பம்சங்களை காண்போம்.
புதுக்கோட்டையில் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு இன்று முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த சிறப்பம்சங்கள்:
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாயனூர் தடுப்பணையிலிருந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும்,42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118 புள்ளி 45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படும்.
மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.
14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படும். இதனால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.







