அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம்

சென்னை அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம்…

சென்னை அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ,சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்தனர். வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான முருகன் சென்னையை அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி கொள்ளையில் 32 கிலோ தங்க நகையில் 18 கிலோ மீட்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 14 கிலோ தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டுவிட்டதாக காவல்துறை விளக்கமளித்தது.

இந்நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் 4 கிலோ மாயம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.