போலி சுங்கச்சாவடி நடத்தி ரூ.75 கோடிக்கு மேல் வசூல் – எங்கே தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு, போலி சுங்கச் சாவடி  நடத்தி வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாமான்போர் – கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்,  மோர்பி…

குஜராத் மாநிலத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு, போலி சுங்கச் சாவடி  நடத்தி வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாமான்போர் – கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்,  மோர்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் இந்த சுங்கச்சாவாடி செயல்பட்டு வருகிறது.
இந்தச் சாலையை ஒட்டி செயல்பட்டு வந்த ஓயிட் ஹவுஸ் டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில், அதன் உரிமையாளர்கள் சாலையை ஏற்படுத்தி,  சட்டவிரோதமாக சுங்கச் சாவடி அமைத்து கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட வகாசியா சுங்கச் சாவடியைவிட சட்டவிரோத சுங்கச்சாவடியில் கட்டணம் பாதியாக இருந்ததால்,  தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தனியார் சாலையைப் பயன்படுத்தி,  குறைந்த கட்டணத்தை செலுத்தி வந்துள்ளன.  இந்த முறையில் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கு கட்டண வசூல் நடைபெற்றுள்ளது.

இது குறித்த தகவல் வெளியான நிலையில்,  காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.  இதையடுத்து,  நிறுனத்தின் உரிமையாளர்கள் அமர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மோர்பி மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  ‘வகாசியா சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.  காவல்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.