தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கவுள்ள புதுமை பெண் திட்ட விழாவில் கலந்து கொள்ளுமாறு டெல்லி முதலமைச்சரை, அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10-ம் தேதி வரை பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செப்டம்பர் 5-ம் தேதி புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு விழாவுக்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
– இரா.நம்பிராஜன்