ஒரத்தநாடு அருகே ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் மதுரையை சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் மற்றும் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் குடும்பத்தோடு தங்கி பல்வேறு பகுதிகளில் பாய் வியாபாரம் செய்து வந்தனர். வியாபாரத்தை முடித்துக் கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது சக நண்பர்கள் சூரக்கோட்டை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றனர்.
இதில் மணிகண்டன் தவறி விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். ஆற்றின் சுழற்சியில் சிக்கியதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய மணிகண்டனை அவரது நண்பர்கள் தேடிப்பார்த்து கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஒரத்தநாடு அருகே மேல உளூர் கல்லணை கால்வாய் ஆற்றில் பிரேதம் மிதந்து வந்ததை கண்ட பொதுமக்கள் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








