நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று…

திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அவரை மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது நீதிமன்ற அறைக்குள் நீதிபதி முன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் ஜோஸ்வாவை நோக்கி வெட்டப் பாய்ந்துள்ளார்.

இதனைக் கவனித்த, காவலர் வேணுகோபால் துரிதமாகச் செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரைத் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி உள்ளார். அதன் பின்னர் அரிவாளுடன் வந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நீதிபதி முன்பு நடைபெற்ற இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணையில், போலி மதபோதகரான ஜோஸ்வா என்பவர் ஊர் ஊராகச் சென்று மத பிரச்சாரம் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் சிக்க வைத்து வந்ததும், அந்த வகையில் நவநீத கிருஷ்ணனின் தங்கை மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மற்றொருபெண் இருவரையும் ஜோஸ்வா ஒரே நேரத்தில் காதலித்ததுடன் இருவரையும் பல்வேறு இடங்களுக்கு வெளியே அழைத்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும்,

ஒரு கட்டத்தில் ஜோஸ்வா நவநீத கிருஷ்ணன் தங்கையை ஏமாற்றிவிட்டு தாழையூத்தை சேர்ந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால், மனமுடைந்த நவநீத கிருஷ்ணனின் தங்கை கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நவநீதருஷ்ணன், தனது தங்கை சாவுக்குக் காரணமான போலி மதபோதகர் ஜோஸ்வா மற்றும் தாழையூத்தை சேர்ந்த பெண் இருவரையும் கொலைவெறியுடன் தேடியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி வன்முறை; கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்!’

ஜோஸ்வா தலைமறைவானதால் தாழையூத்து பெண்ணை கொலை செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார் அங்கு அந்த பெண்ணின் தாய் மட்டுமே இருந்ததால் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் தான் அந்த தாக்குதலை நடத்த முன்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

தங்கை வாழ்க்கையைச் சீரழித்த ஜோஸ்வாவை கொலை செய்யத் திட்டம் தீட்டி வந்த நவநீத கிருஷ்ணன்,  பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் போலி மதபோதகர் ஜோஸ்வா இன்று நெல்லை மகிளா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்பதனை அறிந்து நவநீத கிருஷ்ணன் நீதிமன்றத்திற்குள் வைத்தே ஜோஸ்வாவை வெட்டி கொலை செய்யும் எண்ணத்துடன் கையில் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்குள்ளேயே தைரியமாகச் சென்றுள்ளார். ஆனால், காவலர் வேணுகோபால் மிகத் துரிதமாகச் செயல்பட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கி முனையில் நவநீத கிருஷ்ணனை சரண்டர் செய்ததால் நீதிபதி கண் முன்பு நடக்க இருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.