குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக ஏமாற்றி, பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தை…

சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக ஏமாற்றி, பலரிடம் பல
கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார்
கைது செய்துள்ளனர்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(50). இவர் தன்னை கட்டுமான தொழில்
செய்வதாகக் கூறி பலரிடம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான பின்னர் சென்னை
புறநகரில் வசிக்கும் சண்முகம் என்பவரிடம், தனக்கு மதுரையில் 60 ஏக்கர் நிலம்
இருப்பதாக பொய் சொல்லி, அந்த நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி அக்ரீமெண்ட்
போட்டு, ரூபாய் 65 லட்சம் பணத்தை முன்பணமாக வாங்கிக் கொண்டு
தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து சண்முகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தாம்பரம் காவல் ஆணையரக குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு
செய்து தலைமறைவாக இருந்த ஜெகநாதனை தேடிப்பிடித்து கைது செய்தனர்.

அதன்பின்பு ஜெகநாதனிடம் நடத்திய விசாரணையில், அவர் மேலும் பலரிடம் நில மோசடி
செய்து, பணம் அபகரித்துள்ளது தெரியவந்தது. அதன்படி தாம்பரம் அருகே
கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராஜாமணி, சுப்பிரமணி ஆகிய இரண்டு பேரிடம், 21 சென்ட்
இடத்தில் வீடு கட்டி தருவதாகக்கூறி, ஒரு கோடி 70 லட்சம் ஏமாற்றி பணம்
வாங்கியுள்ளார்.

அதோடு அவர்களுடைய போலியான கையெழுத்தை போட்டு, போலி ஆவணங்களை
தயார் செய்து, போலி UDS மூலம் வங்கியில் அவர்கள் பெயரில் ரூபாய் 8 கோடி வரை
கடன் வாங்கி விட்டு, அந்த கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியும் உள்ளார்.

மேலும் பல்லாவரத்தை சேர்ந்த சரஸ்வதி கலா, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி
ஆகியோரிடமும் வீடு கட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் மோசடி
செய்துள்ளார். இதேபோல் ஜெகநாதன், பலரிடம் பல கோடி ரூபாய் பணம் மோசடி
செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் ஜெகநாதரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.