அரபிக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் கன மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அந்தமான் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனக்கூறிய அவர், அரபிக்கடல் பகுதியில் மேலும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார். குமரிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக புவியரசன் தெரிவித்துள்ளார்.