தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழையும்,
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒருநாள் தாமதமாக நாளை மறுநாள் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.